இந்தியா

டெல்லியில் சோகம்: ரீல்ஸ் சண்டையால் மனைவி கொலை; கணவர் தற்கொலை!

By VASUKI
04 Sep 2025, 04:29 PM
டெல்லியில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ததற்காக மனைவியை கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் நஜாஃப்கர், ரோஷன்புரா பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான அமன், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். அமனின் மனைவி இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் வெளியிட்டு வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவருக்கு 6,000 பேர் பின்தொடர்பவர்களாக இருந்துள்ளனர். நாளுக்கு நாள் இந்த ரீல்ஸ் விவகாரம் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையை ஏற்படுத்தியுள்ளது. ரீல்ஸ் செய்யக் கூடாது என்று பலமுறை அமன் தனது மனைவியைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று, ரீல்ஸ் தொடர்பாக மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அமன், தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர், தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அமனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். போலீசார் பெண்ணின் உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம், டெல்லியின் ரோகிணி செக்டர் -17 பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக 34 வயது பெண் மற்றும் அவரது தாயார், அந்தப் பெண்ணின் கணவரால் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைதளங்களால் ஏராளமான குடும்பங்களில் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.

(எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் தோன்றினாலோ, கீழ்காணும் சேவை எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். மாநில உதவிமையம்: 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050).