Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

பிரதமர் மோடியின் ஜப்பான், சீனா பயணம்: இரு நாடுகளுடனான உறவில் புதிய அத்தியாயம்!

By VASUKI
28 Aug 2025, 05:36 PM
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக ஜப்பான் மற்றும் சீனாவுக்கு இன்று (ஆகஸ்ட் 28) இரவு தனி விமானம் மூலம் புறப்படுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, இந்திய-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்துகொள்ளவும் இன்று இரவு டெல்லியில் இருந்து ஜப்பான் மற்றும் சீனாவுக்குப் புறப்படுகிறார்.

ஜப்பானில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள்

பிரதமர் மோடி, தனது ஜப்பான் பயணத்தின்போது அந்நாட்டுப் பிரதமர் ஷிகெரு இஷிபாவைச் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசிப்பார்கள்.

2014 ஆம் ஆண்டு பிரதமர் பதவியேற்றபிறகு மோடி மேற்கொள்ளும் எட்டாவது ஜப்பான் பயணம் இது. கடைசியாக அவர் 2018-ல் ஜப்பானுக்குச் சென்றிருந்தார். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தக மோதல் அதிகரித்து வரும் நிலையில், மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சீனாவில் SCO மாநாட்டில் பங்கேற்பு

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட பிறகு, பிரதமர் மோடி ஆகஸ்ட் 31ஆம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்குச் செல்கிறார். அங்குத் தியான்ஜினில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

செப்டம்பர் 1 ஆம் தேதி சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உட்பட சுமார் 20 உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின் ஒரு பகுதியாக, அவர் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பொருளாதாரம், பிராந்திய ஒத்துழைப்பு போன்ற முக்கியமான விஷயங்கள்குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினராக இருக்கும் இந்தியா, 2022-23 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பையும் வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.