Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

Joint account-ல் வயது வரம்பு தளர்வு.. RBI-யின் புதிய அறிவிப்பு

By nagalekshmi
22 Apr 2025, 10:16 AM
10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் சொந்தமாக வங்கி கணக்கு தொடங்கும் புதிய அறிவிப்பை இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வங்கி சேமிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. நடுத்தர குடும்பத்தினர் தங்களது கையில் பணம் இருந்தால் செலவழித்துவிடுவோம் என்ற பயத்தில் வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்து வருகின்றனர். சிலர் தங்களது குழந்தைகளின் பெயரில் பணத்தை சேமித்து வைத்து வருகின்றனர். பொதுவாக, இதுவரை வங்கிகளில் 18 மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தனி (Personal) வங்கி கணக்கு வழங்கப்பட்டு வருகிறது.

18 வயதிற்கு உட்பட்டோருக்கு இணை (Joint account) வங்கி கணக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, பாதுகாவலர்களின் உதவியுடன் மட்டுமே வங்கி கணக்கு திறக்கப்படுகிறது. இந்நிலையில், 10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் தாங்களாகவே வங்கி சேமிப்பு கணக்கு அல்லது வைப்பு கணக்குகளை தொடங்கலாம் என இந்தியன் ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

10 வயதிற்கு மேற்பட்டோருக்கு தனி வங்கி கணக்கு

அதன்படி, 10 வயதிற்கு மேற்பட்ட மைனர்கள், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இல்லாமல் வங்கிகளில் சொந்தமாக சேமிப்பு மற்று வைப்பு கணக்குகளை தொடங்கலாம். வங்கிகள் தங்களது இடர் மேலாண்மை கொள்கையின் (risk management policy) அடிப்படையில், கணக்குகளில் பணத்தின் இருப்பு அளவு (Minimum balance), பணம் எடுக்கும் வரம்பு போன்ற கட்டுப்பாடுகளை அமைக்கலாம்.

இதன் மூலம், 10 வயதுக்கு மேற்பட்ட வங்கி பயனாளர்களுக்கு வங்கியின் அனுமதியுடன் ஏடிஎம் (ATM), காசோலை புத்தகம் ஆகியவற்றை வழங்க முடியும். ஆனால், இதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணத்தை எடுக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். வங்கிகள் ஜூலை 1-ஆம் தேதிக்குள் தங்கள் வங்கிக் கொள்கைகளை புதுப்பிக்குமாறு இந்தியன் ரிசர்வ் வங்கி (RBI) அறிவுறுத்தியுள்ளது.