Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

மினிமம் பேலன்ஸ்: வங்கிகள் தீர்மானிக்க முடியுமா? ரிசர்வ் வங்கியின் ஆளுநர் விளக்கம்

By MUTHUKRISHNAN
12 Aug 2025, 07:21 AM
இந்தியாவிலுள்ள வங்கிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மினிமம் பேலன்ஸ் தொகையினை தீர்மானித்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
ஐசிஐசிஐ வங்கி அதன் அனைத்து கிளைகளிலும், சேவிங்ஸ் கணக்கிற்கான குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையினை (மினிமம் பேலன்ஸ்) ரூ.50,000-வரை உயர்த்தியது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில், வங்கிகள் தன் விருப்பத்திற்கேற்ப மினிமம் பேலன்ஸ் தொகையினை தீர்மானிக்க முடியுமா? என்கிற கேள்வி வாடிக்கையாளர்கள் மத்தியல் எழுந்தது. சமூக வலைத்தளங்களில், இந்தியாவின் வங்கி ஒழுங்குமுறை ஆணையமான இந்திய ரிசர்வ் வங்கியின் ஐடியினை பலர் டேக் செய்து இந்த சந்தேகங்களை எழுப்பி வந்தனர். தற்போது இதுக்குறித்து விளக்கமளித்துள்ளார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா.

நேற்றையத் தினம் குஜராத்தின் மேஸ்சானா மாவட்டத்தில் நடைப்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பேசுகையில், இந்தியாவில் உள்ள வங்கிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மினிமம் பேலன்ஸ் தொகையினை தீர்மானிக்க சுதந்திரம் கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

“சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ₹ 10,000 ஆகவும், சில வங்கிகள் ₹ 2,000 ஆகவும் நிர்ணயித்துள்ளது. இன்னும் சில பொதுத்துறை வங்கிகள் மினிமம் பேலன்ஸ் தொகை நடைமுறையினை கைவிட்டுள்ளது. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச கணக்கு இருப்பு (MAB- minimum account Balance) எவ்வளவு இருக்க வேண்டும், என்பதை தனிப்பட்ட வங்கிகள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று மல்ஹோத்ரா தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் கல்வியறிவின் அவசியத்தை வலியுறுத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா , "முன்பு, படிக்கவில்லை என்றால் முன்னேற்றம் அடைய முடியாது என்று சொல்லி வந்தார்கள். இன்றைய காலகட்டத்தில், டிஜிட்டல் கல்வியறிவுக்கும் இதுவே பொருந்தும். டிஜிட்டல் கல்வியறிவு இல்லையென்றால் முன்னேற முடியாது. வங்கிக் கணக்குகளைத் திறப்பது வெறும் ஆரம்பம்தான். விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசாங்கம் தொடங்கியுள்ளது. மக்கள் பல்வேறு அரசுத் திட்டங்களைத் தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

ஐசிஐசிஐ வங்கியின் மினிமம் பேலன்ஸ்:

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் கடன் வழங்குநரான ஐசிஐசிஐ வங்கி ஆகஸ்ட் 1, 2025 முதல் அதன் புதிய சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்பினை பன்மடங்கு அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு புதியதாக ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு தொடரும் வாடிக்கையாளருக்கு தான் என்றாலும், பழைய வாடிக்கையாளர்கள் வங்கியின் நடவடிக்கைகளை கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.

பெருநகரங்கள்/மெட்ரோ (Metro and Urban Locations) பகுதிகளில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளையில் கணக்கு தொடர்பவர்களின் வங்கிக்கணக்கில் மாதாந்திர மினிமம் பேலன்ஸ் (Minimum Average Balance) ரூ.50,000- இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த தொகை ரூ.10,000 ஆக தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை போல் நகர்புறங்களில் (Semi urban locations) உள்ள வங்கிக்கிளையில் மாதாந்திர மினிமம் பேலன்ஸ் ரூ.25,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த தொகை ரூ.5000 மட்டுமே இருந்தது. கிராமப்புற வங்கி கணக்குகளுக்கு மாதாந்திர மினிமம் பேலன்ஸ் ரூ.2500-லிருந்து ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை மாதாந்திர மினிமம் பேலன்ஸ் தொகையினை வாடிக்கையாளர் பராமரிக்கவில்லை எனில், பற்றாக்குறையில் 6 சதவீதம் அல்லது ரூ.500 (இதில் எது குறைவோ) அபராதமாக விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31-க்கு முன்பு வரை ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு தொடங்கியவர்களுக்கு இந்த புதிய விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.