Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

இனி எல்லாம் அப்படிதான்.. கட்டணத்தை உயர்த்திய RBI.. வாடிக்கையாளர்கள் கவலை

By nagalekshmi
29 Mar 2025, 08:02 AM
வரம்பை மீறிய ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து மே 1-ஆம் தேதி முதல்  23 ரூபாய் வசூல் செய்யப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

எளிமையான பண பரிவர்த்தனைக்காக என்னதான் கூகுள் பே (Gpay), போன் பே (Phone pay) போன்ற வசதிகள் வந்தாலும் நம்மில் இன்னும் சிலர் வங்கிகளில் சென்று தான் பணத்தை எடுத்து வருகிறார்கள். ஒரு சில குறிப்பிட்ட தொகைகளை ஏடிஎம் மூலமாக மட்டுமே நம்மால் எடுக்கவும் முடிகிறது.

அதுமட்டுமல்லாமல், ஒரு சில நேரங்களில் சர்வர் டவுனாகி (Server down) டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாத போது நாம் ஏடிஎம் மிஷின்களை தான் நாடுகிறோம்.

ஆர்பிஐ அறிவிப்பு

இந்நிலையில், ஏடிஎம் மிஷின்களில் மேற்கொள்ளப்படும் இலவச பரிவர்த்தனைகளுக்கான வரம்பு மீறினால் வசூலிக்கப்படும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. 

அதாவது, ஒரு வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி தொடர்பான ஏடிஎம்-களில் ஒவ்வொரு மாதமும் நிதி (Amount transaction) மற்றும் நிதி அல்லாத (Amount non transaction) பரிவர்த்தனை என ஐந்து இலவச பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

மேலும், பிற வங்கி ஏடிஎம்-களில் மூன்று இலவச பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த பரிவர்த்தனை வரம்பு மீறும் போது அதற்காக 21 ரூபாய் கட்டணமாக வங்கி சார்பில் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.இந்த கட்டணம் 21 ரூபாயில் இருந்து 23 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மே1 முதல் அமல்

இந்த நடமுறையானது மே 1-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் வரம்பை மீறும் பரிவர்த்தனைகளுக்காக வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து 21 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.