Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

இந்தியா மீது பாகிஸ்தான் விடிய விடிய தாக்குதல்.. முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

By VASUKI
09 May 2025, 11:30 AM
India vs Pakistan War Update : ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மீது பாகிஸ்தான் விடிய விடிய தாக்குதல் நடத்திய நிலையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
India vs Pakistan War Update : பாகிஸ்தான் மீதான தாக்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோனையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவுகள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக, பாகிஸ்தானிலும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீதும், 'ஆப்ரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் காணப்படுகிறது. இதனையடுத்து ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது.

இரவு தொடங்கி விடிய விடிய நடந்த இந்தத் தாக்குதலை, இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்நிலையில், தற்போது எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா பாகிஸ்தானுக்கு போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தலைமை தளபதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். இதில், பாகிஸ்தானின் எதிர்த் தாக்குதல் குறித்தும், நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், ஆப்ரேஷன் சிந்தூரின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானுடன் போர் பதற்றம் அதிகரித்து காணப்படுவதால், பஞ்சாப், ராஜஸ்தானில் உள்ள
எல்லையோர மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. டெல்லி, உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.