இந்தியா

இயல்புநிலை திரும்பும் பஹல்காம்.. தாக்குதலில் இருந்து மீண்டு வரும் மக்கள்!

By VASUKI
26 Apr 2025, 01:56 PM
பஹல்காம், தீவிரவாத தாக்குதல், இயல்புநிலை, ஜம்மு - காஷ்மீர், துப்பாக்கிச்சூடு,
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு கடுமையாக பாதிக்கப்பட்ட பஹல்காம் பகுதியானது, மெதுமெதுவாக இயல்புநிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் தீவிரவாதிகளின் வீடுகள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் எல்லையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலில் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் கொதிப்படைந்த மத்திய அரசு, பாகிஸ்தானியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுதல், சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்தல் என பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இதன்காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் உருவாகும் சூழல் நிலவிவரும் நிலையில், இந்தியாவின் தடுப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால், இது போராகவே கருதப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு எச்சரித்தது.

அமைதிப் பேணும் நாடான இந்தியா இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது, வாகா எல்லையை மூடியது என பல நடவடிக்கைகளை எடுத்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து எல்லை கட்டுப்பாடு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கடந்த 24-ம் தேதி இரவு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், இந்திய ராணுவமும் அதற்கு பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் நேற்று இரவும் பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

இதனிடையே காஷ்மீர் எல்லையில் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் மலையேற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதித்தும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி என்ன எனபது குறித்து விவாதம் எழுந்த நிலையில், சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.