இந்தியா

ஆப்ரேஷன் சிந்தூர்: புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது- பிரதமர் மோடி

By MUTHUKRISHNAN
25 May 2025, 08:19 PM
உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களிடையே மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி உரையாடி வருகிறார். அந்த வகையில், தனது 122வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது, “ தேசம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுப்பட்டு இருக்கிறோம். பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்பதே இன்று அனைவரின் உறுதிப்பாடாக உள்ளது.

புதிய உத்வேகம்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, நமது வீரர்கள் வெளிபடுத்திய துணிச்சல் மற்றும் வீரம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைத்துள்ளது.

நமது வீரர்களின் துல்லியமான தாக்குதலால் எல்லை தாண்டியுள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூரின் பாதிப்பு

நாட்டில் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் தேசியக்கொடியை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்று நமது வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். ஆப்ரேஷன் சிந்தூர் நாட்டு மக்களை மிகவும் பாதித்துள்ளது. அதனை பலர் தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாற்றியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் மற்றும் பல நகரங்களில் அந்த காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என பெயர் சூட்டியுள்ளனர். இது போல் பல்வேறு விஷயங்கள் மனதை தொடும் வகையில் அமைந்துள்ளது.

ஒரு பெற்றோர் இனிமேல் தங்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்கித் தருவோம், சிறுவயது முதலே தேசபக்தியை தொடங்க வேண்டும் என குறிப்பிட்டு பேசினார். நாம் நமது வாழ்க்கையில் முடிந்த வரையில் நம்முடைய நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கே முன்னுரிமை அளிப்போம். நமது ஒவ்வொரு அடியெடுப்பும், நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க முடியும்” என கூறினார்.