இந்தியா

நீதி வழங்கும் நோக்கில் ஆபரேஷன் சிந்தூர்- கர்னல் சோபியா குரேஷி

By VASUKI
07 May 2025, 01:07 PM
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில் ஆப்ரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டதாக கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் என 9 இடங்களில் இந்த தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது எந்த ஒரு தாக்குதல்களையும் நடத்தாமல், பயங்கராவத முகாம்களை மட்டுமே குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது.

இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்து கர்னல் சோபியா குரேஷி விளக்கமளிக்க செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கரமிப்பு காஷ்மீரின் முக்கிய 9 இடங்களை தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார். இந்த தாக்குதலை அதிகாலை 1.05 மணி முதல் 1.30 மணி வரை, 25 நிமிடங்கள் தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்திய இந்த தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறினார்.

உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் பொதுமக்களும் அவர்கள் இடங்களும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கரமிப்பு காஷ்மீரில் தொடர்ந்து 25 நிமிடங்களுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலுக்கான ஆயுதங்கள் கவனமாக தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மக்களுக்கு பதற்றம் ஏற்படுத்தா வண்ணம், பயங்கரவாதிகளின் இடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்தினோம். குறிவைத்த கட்டிடங்களை மட்டும் இந்தியா துல்லியமாக தாக்கி அழித்தது என்றும் விளக்கமளித்தார். மேலும், இந்தியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறினார். பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நிச்சயம் பதிலளிக்க வேண்டும். இந்த தாக்குதல் மூலம் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளுக்கு இந்தியா செய்தி அனுப்பியுள்ளது.