Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

பீகார் தேர்தலில் போட்டியில்லை.. கட்சி அமைப்பை வலுப்படுத்த முடிவு- பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்!

By Christon
15 Oct 2025, 01:21 PM
பீகார் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வியூக அமைப்பாளராக இருந்து அரசியலுக்குத் திரும்பிய பிரசாந்த் கிஷோர், வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று உறுதியாக அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக, கட்சி அமைப்பை வலுப்படுத்தும் பணியில் கவனம் செலுத்தி, மாநிலம் முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்யவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்தலில் போட்டியில்லை

தனது ஜன் சுராஜ் கட்சியின் மூலம் அரசியல் களத்தில் இறங்கியுள்ள பிரசாந்த் கிஷோர், ஆரம்பத்தில் தனது சொந்தத் தொகுதியான கார்கஹார் அல்லது ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் கோட்டையான ராகோபூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.

ஆனால், அவர் நேற்று வெளியிட்ட கட்சி வேட்பாளர் பட்டியலில், கார்கஹார் தொகுதிக்கு ரித்தேஷ் ரஞ்சனும், ராகோபூருக்கு சஞ்சய் சிங்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதன் மூலம் பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர், "வரவிருக்கும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. கட்சி பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறேன். அனைத்து தொகுதிகளிலும் ஜன்சுராஜ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப் போகிறேன்" என்றார்.

பிரசாந்த் கிஷோரின் கணிப்பு

தொடர்ந்து பேசிய அவர், "பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை தழுவும். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள். நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களில் வெற்றி பெறுவதற்கு கூட கடுமையாக போராட வேண்டியதாக இருக்கும். நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக வர வாய்ப்பில்லை" என தெரிவித்தார்.

மேலும், இந்தியா (IND bloc) கூட்டணியின் நிலைமையும் தற்போது சரியாக இல்லை. ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.