இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு: விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி!

By Christon
23 Jul 2026, 11:16 AM
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து பிரதமர் மோடி, தவறிழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும், வழக்குகளை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

டெல்லி போராட்டமும் மோதலும்

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாகவும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களைப் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் அறிவிப்பு

இந்தச் சூழலில், சமூக வலைதளப் பதிவில் விளக்கம் அளித்துள்ள பிரதமர் மோடி, இளைஞர்களின் நலனும் எதிர்காலமுமே அரசின் முக்கிய முன்னுரிமை எனக் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு உள்ளிட்ட வினாத்தாள் கசிவு வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தி, குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுபவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.