Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

மகராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்.. ஆட்சியை கைப்பற்றும் பாஜக? கொண்டாடி தீர்க்கும் தொண்டர்கள்

By Kumudam News
23 Nov 2024, 11:41 PM
மகராஷ்டிராவில் 220 தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன.

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் நவம்பர் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக  வாக்குப் பதிவு நடைபெற்றது.  இதில், மகராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியும் மோதின.

மும்பையின் வொர்லி சட்டமன்றத் தொகுதியில் சிவசேனா (உத்தவ்) கட்சி சார்பாகவும், சிவசேனா (ஷிண்டே) தரப்பில் மிலிந்த் தியோராவும், மகராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) சார்பில் சந்தீப் தேஷ்பாண்டேவும் போட்டியிட்டனர்.

மகராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் 73.7 சதவீத வாக்குகளும், கோலாப்பூர் மாவட்டத்தில் மாநிலத்திலேயே அதிக பட்சமாக 76.3 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது. மாநிலம் முழுவதும் சராசரியாக 65.1 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தது.

மேலும், இந்த தேர்தலில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கருத்துக்கணிப்பு சமீபத்தில் வெளியானது. இதில், பல ஊடங்களின் கருத்துக் கணிப்பில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் தான் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில், காலை 11 மணி நிலவரப்படி பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 220 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறன. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் 56 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 12 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. 

இந்த முன்னிலை நிலவரத்தால் உற்சாகமடைந்த பாஜக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் இதனை கொண்டாடி வருகின்றனர்.