Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

மனைவியின் தங்கை மீது காதல்.. திருமணம் செய்து வைக்க கோரி இளைஞர் நூதன போராட்டம்!

By Christon
30 Aug 2025, 02:07 PM
உத்தரப்பிரதேசத்தில் தனது மனைவியின் சகோதரியை திருமணம் செய்துவைக்க கோரி, இளைஞர் ஒருவர் மின்சார கோபுரத்தில் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கன்னோஜ் மாவட்டத்தில் ஒரு நபர், தனது மனைவியின் சகோதரியைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கோரி, மின்சார கோபுரத்தின் மீது ஏறி வினோதமான போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் தங்கை மீது காதல்

ராஜ் சக்ஸேனா என்ற அந்த நபர், கடந்த 2021-ஆம் ஆண்டு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். ஆனால், ஓராண்டுக்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். இதையடுத்து, சக்ஸேனா தனது மனைவியின் தங்கையைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தை இரு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டனர்.

இரண்டு ஆண்டுகள் கழித்து, அவர் தனது இரண்டாவது மனைவியின் தங்கை மீது காதல் கொண்டுள்ளார். கடந்த 28 ஆம் தேதி காலையில், ராஜ் தனது மனைவியிடம் இளைய சகோதரியைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சக்ஸேனா, கிராமத்தில் உள்ள ஒரு மின்சாரக் கோபுரத்தில் ஏறி, மனைவின் தங்கையை திருமணம் செய்து வைக்க வேண்டும் என உரக்கக் கத்தத் தொடங்கினார். இதனால், அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது.

7 மணி நேரம் பேச்சுவார்த்தை

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், உடனடியாக விரைந்து வந்தனர். போலீஸார் மற்றும் குடும்பத்தினர் சுமார் 7 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அவருக்கு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னரே அவர் மின் கோபுரத்தில் இருந்து பாதுகாப்பாக கீழே இறங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் சக்ஸேனா, தனது மனைவியின் சகோதரியும் தன்னைக் காதலிப்பதாகக் கூறினார். இந்தச் சம்பவம் குறித்து இதுவரை எந்தவிதமான புகாரும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது, இடையூறு செய்தது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.