Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

King Cobra Dies : பாம்புபிடி வீரரை கடித்த 'கிங் கோப்ரா' உயிரிழப்பு; என்ன நடந்தது?

By Kumudam News
05 Aug 2024, 05:15 PM
Kig Cobra Dies After Bite Snake Catecher in Madhya Pradesh : மிக கடுமையாக சீறிய கிங் கோப்ரா பாம்பு சந்திரகுமார் அஹிர்வாரின் பெரு விரல்களில் கொத்தியது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிசிச்சை பெற்று வீடு திரும்பினார்.

Kig Cobra Dies After Bite Snake Catecher in Madhya Pradesh : 'பாம்பை கண்டால் படையும் நடுங்கும்' என்பார்கள். பாம்புக்கடியால் ஆண்டுதோறும் ஏராளமான மனிதர்கள் உயிரிழந்து வருவதே இதற்கு காரணம். ஒரு வீட்டுக்குள் அல்லது ஒரு கட்டடத்துக்குள் பாம்பு புகுந்து விட்டால் அதனைபிடிக்க பாம்பு பிடி வீரர்களை அழைப்பார்கள். அவர்கள் உடனடியாக அங்கு வந்து பாம்புகளை பிடித்துச் செல்வார்கள்.

பொதுவாக பாம்பு பிடி வீரர்கள் அதிக விஷத்தன்மை கொண்ட கிங் கோப்ரா(King Cobra), கட்டு விரியன் மற்றும் நல்ல பாம்பு வகைகளை அசால்ட்டாக பிடித்து விடுவார்கள். எவ்வளவுதான் கவனமாக பிடித்தாலும் சில பாம்பு பிடி வீரர்கள் பாம்புகள் தீண்டி உயிரிழப்பது நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பாம்பு பிடி வீரரை கடித்த பாம்பு ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் நடந்தது. 

பாம்பு கடித்தால் கடிபட்டவர்கள்தானே உயிரிழப்பார்கள், பாம்பு எப்படி இறக்கும்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இது குறித்த விவரத்தை காண்போம். மத்திய பிரதேச மாநிலத்தில் நாராயணாவலி என்ற இடத்தில் பகசாகர்-குரை சாலையில் மக்கள் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மிக அதிக விஷத்தன்மை கொண்ட 'கிங் கோப்ரா' பாம்பு ஒன்று புகுந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அதே பகுதியை சேர்ந்த சந்திரகுமார் அஹிர்வார் என்ற பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக அங்கு விரைந்து வந்த அவர், 'கிங் கோப்ரா'(King Cobra) பாம்பை பிடித்தார். ஆனால் கடுமையாக சீறிய பாம்பு சந்திரகுமார் அஹிர்வாரின் பெரு விரல்களில் கொத்தியது.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிசிச்சை பெற்று வீடு திரும்பினார். இதற்கிடையே சந்திரகுமார் அஹிர்வாரை தீண்டிய 'கிங் கோப்ரா' பாம்பு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அதாவது விஷப் பாம்பை பிடித்த சந்திரகுமார் அஹிர்வார், அதனை ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் பூட்டி வைத்துள்ளார்.

அந்த பிளாஸ்டிக் பெட்டி முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. அதில் காற்று போக எந்த வசதியும் இல்லாததால் அதன் உள்ளே வைக்கப்பட்ட  'கிங் கோப்ரா' பாம்பு மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாம்புக் கடி தொடர்பாக சந்திரகுமார் அஹிர்வாரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

'பாம்புபிடி வீரர்கள் தாங்கள் பிடிக்கும் பாம்புகளை, காற்று எளிதில் செல்லக்கூடிய கவர்கள் அல்லது பெட்டிகளில் அடைத்து அதனை கொண்டு செல்ல வேண்டும். கொஞ்சம்கூட காற்று புகாத இடத்தில் அடைத்தால் பாம்புகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது' என்று கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.