ஆந்திரப் பிரதேச மாநிலத் துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், தமிழகத்தின் அரசியல் சூழல் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் அரசியல் எழுச்சி குறித்துப் பொதுக்கூட்டம் ஒன்றில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
கொஞ்சம் பொறாமை
அமராவதி அருகே நேற்று நடைபெற்ற ஜனசேனா கட்சியின் கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், தமிழக அரசியலைத் தான் கவனித்து வருவதாகக் குறிப்பிட்டார். "தமிழகத்தில் மிக எளிதாக அரசியல் செய்கிறார்கள்; கட்-அவுட் மற்றும் ஹாலோகிராம் மூலமாகவே வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து, முதல்வர் ஆக முடிகிறது. இதைப் பார்க்கும்போது எனக்குக் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.
நான் 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன், ஆனால் என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை," என்று தெரிவித்தார். மேலும், ஒரு அரசியல் கட்சியை நடத்த மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
விஜய்யுடன் ஒப்பீடு மற்றும் கூட்டணிக்கான விளக்கம்
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, ஜனசேனா கட்சி ஏன் ஆந்திராவில் கூட்டணி அமைத்தது என்று எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பவன் கல்யாண் விளக்கமளித்துள்ளார். தமிழகத்துடன் ஒப்பிடும்போது ஆந்திராவின் அரசியல் சூழல் முற்றிலும் வேறுபட்டது என்று குறிப்பிட்ட அவர், தனக்குப் பதவி மற்றும் அதிகாரத்தை விடச் சித்தாந்தமும் கொள்கையுமே முக்கியம் என்றார்.