Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

 IQAir-ன் உலக காற்று தர அறிக்கை.. இந்தியாவிற்கு 5-வது இடம்...!

By VASUKI
11 Mar 2025, 03:57 PM
உலகின் காற்று மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தையும், உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடெல்லி முதலிடத்தையும் பிடித்துள்ளதாக 2024 ஆம் ஆண்டின் காற்று தர அறிக்கை வெளியாகியுள்ளது. 

இந்தியாவை பொறுத்தவரை காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்லும் சூழலில், காற்று தரவரிசைப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடம் பெற்றுள்ளது. சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir 2024 ஆம் ஆண்டின் உலக காற்று தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 

IQAir அறிக்கை

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உலகில் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளது.  அசாம் மாநிலத்தில் உள்ள பைர்னிஹாட், டெல்லி, பஞ்சாபில் உள்ள முல்லன்பூர், ஃபரிதாபாத், லோனி, புது டெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர், நொய்டா ஆகிய 13 நகரங்கள் அதிகம் காற்று மாசுபட்ட நகரங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அசாமின் பைர்னிஹாட் நகரம் உலகின் மாசுபட்ட நகரங்களில் முதலிடமும், உலகில் மாசுபட்ட தலைநகரங்களில் புதுடெல்லி முதலிடமும் பெற்றுள்ளது.

Read More: மத்திய அமைச்சர் ப்ளாக்மெயில் செய்வதாக முதலமைச்சர் விமர்சனம்!

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பட்டியலின் அடிப்படையில், உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது  இந்தியா 5- வது இடத்தை பெற்றுள்ளது. 

ஆயுள் காலம் குறைவு

இந்தியாவில் காற்று மாசுபாடு எப்போதும், பொதுமக்களுக்கு கடுமையான சுகாதாரப் பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்தது. இவ்வாறு காற்றின் தரம் தொடர்ந்து மாசுபடுவதால், இந்தியர்களின் ஆயுள் காலம் 5.2 ஆண்டுகள் குறைவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு சுவாசத்திலும் நச்சு கலந்து, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறது. இதனால்,  நுரையீரல் தொற்று, இதய நோய், புற்றுநோய் என மரணத்தின் பல்வேறு வடிவங்களை இந்த நச்சுக்காற்று வழங்குகிறது.