Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

புதிய பான் 2.0 கார்டு அறிமுகம்..? புதிய கார்டு யார் வாங்கலாம்..!

By VASUKI
27 Nov 2024, 04:25 AM
பான் 2.0 என்ற அதிநவீன வசதி கொண்ட பான் கார்டுகளை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. 

பான் PAN 2.0 என்ற பெயரில் முழுவதுமாக, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அதிநவீன வசதிகொண்ட பான் கார்டை அறிமுகப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பான் கார்டு பற்றி வெளியான தகவலால் பொது மக்கள் குழப்பமடைந்தனர். மேலும்,  புதிய பான் கார்டுக்கு விண்ணபிக்க வேண்டுமா..? என்ற சந்தேகம் பொது மக்களிடையே எழுந்த நிலையில், மத்திய அரசு தற்போது விளக்கமளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை, ரேஷன் அட்டைகளை போல பான் கார்டும் தற்போது தவிர்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்தியாவில் வருமான வரித்துறையால் வழங்கப்படும் முக்கிய அடையாள அட்டையாகவும் பான் கார்டு உள்ளது. வருமான வரி செலுத்துவதற்கு மட்டுமின்றி, வங்கிகளில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் எடுப்பதற்கு, பண பரிமாற்றத்திற்கு என நிதி சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு பான் அட்டை அவசியம். ஒரு நபர், ஒரு பான் அட்டை மட்டும் வைத்திருக்க முடியும் நிலையில், முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய பான் 2.0 அட்டை பொதுமக்களுக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

புதிதாக அறிமுகமாகும் பான் அட்டையில் கியூஆர் கோடு இடம்பெறவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள பான் அட்டையில், எண் மற்றும் எழுத்தில் 10 இலக்க அடையாள குறியீடு மட்டுமே உள்ளது. இதனை கி.யூ.ஆர் கோடாக மாற்றுவதன் மூலம், வரி செலுத்துபவர்களுக்கு டிஜிட்டல் சேவை மேம்படுத்தப்படுவதுடன், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மேலும், எளிதாக அணுகி விரைவான சேவையை பெறுதல், உண்மைத்தன்மையின் ஒற்றை ஆதாரம் மற்றும் தரவுகளின் நிலைத்தன்மை, பாதுகாப்பு, செலவினம் குறைப்பு என பல்வேறு பயன்கள் இருப்பதாக மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதனை செயல்படுத்துவதற்கு ரூ.1,435 கோடி செலவிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பழைய பான் அட்டையை மேம்படுத்தி, டிஜிட்டலாக நவீன பான் கார்டு பயனாளர்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். “காகிதமின்றி முற்றிலும் ஆன்லைனில் பிரத்யேக இணையதளம் மூலம் இதனை செயல்படுத்த இருப்பதாக” கூறிய அமைச்சர், “பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த மையமாக இது இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.