Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

சத்தீஸ்கரில் இணைய மோசடி: ஒன்றரை ஆண்டில் ரூ. 107 கோடி இழப்பு!

By VASUKI
16 Jul 2025, 04:54 PM
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பதிவான 1,301 இணைய மோசடி வழக்குகளில் ரூ.107 கோடி பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 1,301 இணைய மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ரூ.107 கோடிக்கு மேல் இழந்துள்ளதாக மாநில சட்டசபையில் துணை முதலமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை 107 வழக்குகளில் ரூ.3.36 கோடி மீட்கப்பட்டுள்ளது. இணைய மோசடிகள் பெருகி வருவதால், இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் சுனில் சோனி கேள்வி எழுப்பிய நிலையில், மேலும், சைபர் குற்றங்களைத் தடுக்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் வினவினார்.

இணைய மோசடியால் பலர் ஏமாற்றப்படுவதாகவும், சில சமயங்களில் தற்கொலைக்குத் தள்ளப்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த துணை முதலமைச்சர் விஜய் சர்மா, சைபர் குற்றங்களைத் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார்.

மாநில சைபர் காவல் நிலையம் மற்றும் ஐந்து மண்டல சைபர் காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட அளவில் சைபர் செல்கள் செயல்பட்டு வருகின்றன. ராய்ப்பூரில் உள்ள காவல் தலைமையகத்தில் அதிநவீன சைபர் தடயவியல் ஆய்வகத்தில், காவல்துறை அதிகாரிகள் டார்க் வெப் மற்றும் கிரிப்டோ கரன்சி போன்ற சிக்கலான விஷயங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்களைத் தடுக்க சைபர் கமாண்டோ திட்டத்தின் கீழ் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சைபர் குற்றங்களில் ஈடுபடும் சிம் கார்டுகள் மற்றும் IMEI எண்கள் தடுக்கபட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகப் புகார் அளிக்கும் வசதிக்காகத் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்டல் (NCRB) செயல்பட்டு வருகிறது. சைபர் கிரைம் உதவி எண் 1930, 24 மணி நேரமும் செயல்படும் நவீன அழைப்பு மையத்துடன் உள்ளது. இதன் மூலம் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் உடனடியாகத் தடுக்கப்படுகின்றன.

2023 முதல் ஜூன் 2025 வரை NCRB போர்ட்டலில் 67,389 பேர் ஆன்லைன் மோசடிகுறித்து புகார் அளித்துள்ளனர். இதில் ரூ.791 கோடி சம்பந்தப்பட்டிருக்கிறது. இதில் 21,195 புகார்கள் விசாரிக்கப்பட்டு, 1,820 பாதிக்கப்பட்டவர்களின் பணம் மீட்கப்பட்டுள்ளது.

இணைய மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். அறியாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் மற்றும் செயலிகளைத் திறக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சைபர் கிரைம் குறித்து புகார் அளிக்க 1930 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது NCRB போர்ட்டலில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பான இணைய பயன்பாடுமூலம் சைபர் குற்றங்களைத் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.