Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

இந்திய மாணவியின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா.. பதற வைக்கும் உண்மை!

By nagalekshmi
16 Mar 2025, 11:12 AM
இந்திய மாணவி ஒருவர் முனைவர் பட்ட படிப்பை மேற்கொள்வதற்காக ‘எஃப்- 1’ மாணவர் விசாவில் அமெரிக்கா சென்ற நிலையில் அவரது விசாவை அந்நாடு ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட படிப்பை மேற்கொள்வதற்காக ‘எஃப்- 1’ மாணவர் விசாவில் அந்நாட்டில் தங்கியிருந்து படித்து வந்தார்.  இந்நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய பயங்கரவாத அமைப்பான ஹமாஸை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் இந்திய மாணவி ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து அம்மாணவியின் விசாவை அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்துள்ளது. இந்த சூழலில் சிபிபி ஹோம் ( சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு) செயலியில் விண்ணப்பித்து இந்திய மாணவி தாமாக தாயகம் திரும்பியதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டி நோயம் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவில் வாழவும் படிக்கவும் விசா சலுகையாக வழங்கப்படுகிறது. ஆனால் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் போது அந்த விசா ரத்து செய்யப்படும். அவ்வாறு விசா ரத்தான கொலம்பியா பல்கலைக்கழக பயங்கரவாத ஆதரவாளர்களில் ஒருவர் தாமாக தாயகம் திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டில் தங்கியிருக்கு சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தாமாக சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்கு விண்ணப்பிக்கும் அம்சத்துடன் ‘சிபிபி ஹோம்’ செயலியை உள்நாட்டு பாதுகாப்புதுறை கடந்த 10-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

 இந்த செயலி மூலம் விண்ணப்பித்து தாமாக நாட்டில் இருந்து வெளியேறுபவர்கள் வருங்காலத்தில் சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்கு திரும்பி வருவதற்கான வாய்ப்பை பெறக்கூடும் என உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Read more:-

பாஸ்போர்ட் அப்ளை பண்ண போறீங்களா? இந்த 5 அப்டேட் மறக்காம தெரிஞ்சுக்கோங்க..