Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

தாயின் ஒப்புதலுடன் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. சிக்கிய பாஜக பிரமுகர்

By MUTHUKRISHNAN
05 Jun 2025, 05:18 PM
ஹரித்வாரில் பாஜகவினை சேர்ந்த பெண், அவரது சொந்த மகளை தனது ஆண் நண்பருக்கு இரையாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுமி அளித்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவின் முன்னாள் மகளிர் அணிப் பிரிவின் மாவட்டத் தலைவராக இருந்த சர்மிளா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவரும், அவரது ஆண் நண்பர் சுமித் பட்வால் என்பவரும் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சர்மிளா தனது சொந்த மகளை, ஆண் நண்பருக்கு இரையாக்கியுள்ளார். ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஹரித்வார், ஆக்ரா மற்றும் பிருந்தாவன் ஆகிய இடங்களில் சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லைகள் அளிக்கப்பட்டதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் தாயின் சம்மதத்துடனும், அவரது முன்னிலையிலும் நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சிறுமி இதுபற்றி யாரிடமாவது கூறினால், அவளது தந்தையைக் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

தொடர் பாலியல் வன்கொடுமையால் நோயுற்ற அந்த சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை தனது தந்தையிடம், தனக்கு நேர்ந்த அவலங்கள் அனைத்தையும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் BNS Sections 70 (2) (gang-rape), 351(3) (criminal intimidation), 3(5) (criminal act) by several persons in furtherance of common intention) பிரிவுகள் மற்றும் POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் பாலியல் வன்கொடுமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, சிறுமியின் தாயார் சர்மிளா மற்றும் அவரது ஆண் நண்பர் சுமித் பட்வால் ஆகியோர் புதன்கிழமை அன்று ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்டனர். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய சுமித் பட்வாலின் கூட்டாளியான சுபம் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டை அடுத்து, சிறுமியின் தாயார் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவர் கடந்த ஆகஸ்ட் 2024 முதல் கட்சிப் பதவிகள் எதிலும் இல்லை என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயின் கண்முன்னே அவரது ஒப்புதலுடன், சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்தேறியுள்ளது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.