Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

பல கோடி ரூபாயை கொட்டிக்கொடுத்த முன்னாள் ஐஐடி மாணவர் .. மலைத்துப்போன சென்னை

By leninakathiya
07 Aug 2024, 12:32 AM
சென்னை ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவர் சென்னை ஐஐடி-க்கு ரூ.228 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவர் கிருஷ்ணா ஷிவுகுலா 1978ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் எம்.டெக் படிப்பை படித்தவர். அமெரிக்காவில் பல ஆண்டுகள், பல்வேறு முன்னணி நிறுவனங்களில் ஏரோஸ்பேஸ் துறையில் பணியாற்றியவர். உதவி செய்தால் மன மகிழ்ச்சி கிடைக்கும் என்பதற்காக இந்த தொகையை வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

228 கோடி ரூபாய் நிதியை 5 வழிகளில் செலவு செய்ய ஐஐடி முடிவு செய்துள்ளது. மானவர்களுக்கு ஊக்கதொகை, விளையாட்டு பிரிவில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஊக்கதொகை, வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சிறந்த கண்டுபிடிப்புகள் குறித்து மக்களிடம் கொண்டு செல்ல ஏற்கனவே ஐஐடி சார்பில் வெளியிடப்பட்டு வரும் சாஸ்த்ரா எனும் இதழை மாத இதழாக மாணவர்களுக்கு கொண்டு செல்லவும், கடினமான துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பேராசியர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் நிதியை செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர், செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய முன்னாள் மாணவர் கிருஷ்ணா ஷிவ்குலா, “228 கோடி ரூபாயை வழங்கியது மன மகிழ்ச்சிக்காக தான். படித்த கல்லூரிக்கு உதவினால் மகிழ்ச்சி கிடைக்கும் என்கிற சுயநலமும் ஒரு காரணம்.

இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு அரசுகள் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது இதனை அரசுகள் தளர்த்த வேண்டும். இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும். இளைஞர்கள் மத்தியில் தன்னம்பிக்கை அதிகரிக்க வேண்டும். இவை மூன்றும் அமெரிக்காவில் பின்பற்றுகின்றனர்.

இதனை இந்தியா போன்ற வளர்ந்த நாடும் பின்பற்றினால் அமெரிக்கா போன்று வளர்ச்சி அடைவதற்கு உதவியாக இருக்கும்” என தெரிவித்தார். இந்திய அளவில் தனிநபர் ஒருவர் ஒரே தவணையில் 228 கோடி ரூபாய் அளித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.