Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

Wayanad Landlside : வயநாடு நிலச்சரிவு பகுதியில் கனமழை.. ராணுவ வீரர்கள் அமைத்த பாலம் வெள்ளத்தில் மூழ்கியது!

By Kumudam News
14 Aug 2024, 10:04 PM
Heavy Rain in Wayanad Landlside Area : நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Heavy Rain in Wayanad Landlside Area : கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் அடுத்தத்து படுபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கட்டடங்கள், அங்கு இருந்த பள்ளிகள், வீடுகள் என அனைத்தும் அப்படியே மண்ணுக்குள் புதையுண்டன. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மண்ணில் புதையுண்டு தூக்கத்திலேயே உயிரை பறிகொடுத்தனர். 

மேலும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். வயநாடு நிலச்சரிவில்(Wayanad Landlside) சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம், காவல் துறையினர் என 1,500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வரும் நிலையில், வயநாடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து(Heavy Rain in Wayanad) வாங்கியது. இதனால் சாலியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.

சாலியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதன் காரணமாக அங்கு ஆற்றை கடக்க ராணுவ வீரர்கள் அமைத்த தற்காலிக பாலம் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. மேலும் அந்த பகுதி முழுவதையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏற்கெனவே முண்டகை மற்றும் சூரல்மலை பகுதிகளில் மீட்பு பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. அங்கு தோண்டத் தோண்ட உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

தற்போது கனமழை-வெள்ளம் காரணமாக மீட்பு பணியில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாயமாகியுள்ள தங்களின் அன்புக்குரியவர்களை மீட்க முடியாமல் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். 

அதாவது நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 60%க்கு மேல் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.75,000மும், 40% முதல் 60% வரை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இதுதவிர நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து உறவினர், நண்பர்களின் வீடுகளின் வசித்து வருபவர்களுக்கு வாடகைத் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவை(Wayanad Landslide) தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. 

கடந்த வாரம் வயநாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிவாரண முகாம்களிலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு வயநாடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு செய்ய அனைத்து உதவிகளும் மத்திய அரசால் வழங்கப்படும்'' என்றார். ஆனால் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.