இந்தியா

H-1B விசா விவகாரம்: அமெரிக்காவின் புதிய உத்தரவு குறித்து இந்தியா ஆய்வு!

By VASUKI
20 Sep 2025, 09:00 PM
அமெரிக்கா அரசு H-1B விசாக்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தவிருக்கும் நிலையில், இது குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இந்தியா ஆய்வு செய்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அரசு, H-1B விசாக்களுக்கு ஆண்டுக்கு $100,000 கட்டணம் விதிக்கவிருக்கும் நிலையில், அதன் முழுமையான தாக்கங்களை இந்தியா ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு, குடும்பங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் "மனிதாபிமான பாதிப்புகளை" உருவாக்கும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கவலை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் கவலை

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் H-1B விசா திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கைகளை இந்திய அரசு கவனித்துள்ளது. இந்த நடவடிக்கையின் முழுமையான விளைவுகள் குறித்து, இந்தியத் தொழில்துறை உட்பட அனைவரும் ஆய்வு செய்து வருகின்றனர் எனக் கூறியுள்ளது. புதிய $100,000 கட்டணம், விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை குடும்பங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கையில் பெரும் இடையூறுகளை உருவாக்கும் எனவும் இந்தியா கூறியுள்ளது.

இந்தியாவின் கோரிக்கை

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும், "புதுமை மற்றும் படைப்பாற்றலில்" பங்கு உண்டு என அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. "திறமையானவர்களின் போக்குவரத்து மற்றும் பரிமாற்றங்கள், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தொழில்நுட்ப வளர்ச்சி, கண்டுபிடிப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் செல்வம் உருவாக்கத்திற்குப் பெரிதும் பங்களித்துள்ளன" எனவும் அது கூறியுள்ளது. எனவே, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்களைக் கருத்தில்கொண்டு, கொள்கை வகுப்பாளர்கள் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.