இந்தியா

பேருந்தில் நடத்துனரை சரமாரியாக தாக்கிய கும்பல்- சிசிடிவி காட்சி வைரல்

By Jayakumar
29 Jul 2025, 12:41 PM
கல்லூரி மாணவியின் கணவன் சம்பவம் நடைபெற்ற மறுநாள் தனது நண்பர்களோடு பேருந்தில் ஏறி நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளார்
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தலச்சேரியிலிருந்து பெருங்கத்தூர் பகுதியை நோக்கி பயணிகளோடு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது அப்போது பேருந்தில் ஏறிய மூன்று பேர் கொண்ட கும்பல் பேருந்தில் பயணிகளுக்கு பயணச்சீட்டு விநியோகித்துக் கொண்டிருந்த நடத்துனரான இரிங்கண்ணூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுவை சரமாரியாக தாக்கியது.

நடத்துனர் மீது தாக்குதல்

இதனால் அவர் கீழே விழவே தொடர்ந்து அந்த கும்பல் தாக்கியது. கும்பலின் தாக்குதலால் காயமடைந்த விஷ்ணுவின் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் ரத்தம் வடிந்த நிலையில் பயணிகள் அவரை தலச்சேரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பாக சொக்கிளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், முந்தைய தினம் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவி ஒருவரிடம் பஸ் பாஸ் இல்லாததால் பயணச்சீட்டு வாங்குமாறு நடத்துனர் விஷ்ணு கூறியதாகவும், மாணவி பயண சீட்டு வாங்க மறுக்கவே இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகள் வைரல்

இந்நிலையில் கல்லூரி மாணவியின் கணவன் சம்பவம் நடைபெற்ற மறுநாள் தனது நண்பர்களோடு பேருந்தில் ஏறி விஷ்ணுவை சரமாரியாக தாக்கியுள்ளார். தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது.