Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

நாட்டிலேயே முதன்முறையாக பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் இன்று முதல் அமல்..!

By VASUKI
27 Jan 2025, 12:31 PM
நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று ( ஜன.27) முதல் அமலுக்கு வருகிறது.

https://www.dinakaran.com/uttarakhand-general-civil-code-implemented-tomorrow/

இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் பாஜக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.

கடந்த 2002ம் ஆண்டு நடந்த உத்தரகாண்ட் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து. அதன் அடிப்படையில் புஷ்கர் சிங் சாமி தலைமையிலான பாஜக அரசு, கடந்த ஆண்டு உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியது. இந்நிலையில் இந்த சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

பொதுசிவில் சட்டம் பற்றி உத்தரகாண்ட் மாநில முதல்வரின் செயலாளர் சைலேஷ் பகோலி கூறுகையில், ‘பிரதமர் மோடி வரும் 28 ஆம் தேதி உத்தரகாண்ட் வருகிறார். அவரது பயணத்துக்கு ஒருநாள் முன்னதாக மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது. பொது சிவில் சட்ட இணையதளம் 27ம் தேதி மதியம் 12.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கப்படுகிறது.

முதல்வர் புஷ்கர் சிங் தாமி இதனை தொடங்கி வைக்கிறார். நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெற உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி அளித்த பேட்டியில், ‘பொது சிவில் சட்டத்தை உத்தரகண்ட் மாநிலத்தில் அமல்படுத்துவதன் மூலம், மக்களிடையே பாலினம், சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு இருக்காது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வரவேண்டும்.

பாலினம், சாதி, மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு இல்லாத சட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலமாக உத்தரகாண்ட்  மாநிலம் திகழும். இந்த புதிய பொது சிவில் சட்டத்தால் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வெளியே வசிக்கும் உத்தரகாண்ட் மக்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்றும், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு மட்டும் இச்சட்டம் பொருந்தாது. பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நடைபெறும் திருமணங்களை 60 நாட்களுக்குள் பதிவு செய்வது கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.