Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

தண்டவாளத்தில் விழுந்த நாய்.. அலட்சியமாக செயல்பட்ட உரிமையாளர்.. வைரலாகும் வீடியோ!

By VASUKI
02 Apr 2025, 08:56 PM
மும்பையில் ஓடும் ரயிலில் தன் வளர்ப்பு நாயுடன் ஏற முயன்ற நபர் அலட்சியமாக இருந்ததால், அவருடைய நாய் தண்டவாளத்தில் விழுந்த சம்பவம்  அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  

மும்பை ரயில் நிலையத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், தன்னுடைய வளர்ப்பு நாயுடன் ஓடும் ரயிலில் ஏற முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. ஓடும் ரயிலில் மனிதர்களே ஏறக்கூடாது. அப்படி ஓடும் ரயிலில் ஏறினால் உரிய தண்டனை வழங்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக சமீப காலமாக ஓடும் ரயிலில் மனிதர்களே ஏறுவதற்கு அஞ்சுகின்றனர். 

தண்டவாளத்தில் விழுந்த நாய்

ராஜ்தானி ரயிலில் வளர்ப்பு நாயுடன் ஏறமுயன்ற உரிமையாளர் அலட்சியமாக ரயில் சென்று கொண்டிருக்கும்போது, நாயின் கயிற்றை பிடித்தபடியே அதில் ஏற முயன்றார். அப்படி, ஓடும் ரயிலில் தன்னுடைய வளர்ப்பு நாயையும் அழைத்துக்கொண்டு ஏற முயன்றபோது, அந்த நாய் கால் இடறி தண்டவாளத்தில் விழுந்தது. சற்று செய்வதறியாது அந்நபர் திகைத்தார். ஆனால், அந்த நாய் தண்டவாளத்தில் ரயிலின் அடியில் சிக்காமல், ஓரமாக நின்றது. தொடர்ந்து, அந்த வளர்ப்பு நாய், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. 

சமூக வலைதளத்தில் வைரல்
 
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள், அந்நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்த ரயில் நிலைய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினர். பின்னர், தண்டவாளத்தில் விழுந்த நாய் பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், பலரும் நாயின் உரிமையாளரை விமர்சித்து வருகின்றனர்.