இந்தியா

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

By Christon
11 Nov 2025, 10:51 AM
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் டாக்டர் உமர் முகமது என்பவற்றின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. கார் குண்டுவெடிப்பின் மூளையாக சந்தேகிக்கப்படும் டாக்டர் உமர் முகமதுவின் (36) புகைப்படத்தை புலனாய்வு அமைப்புகள் முதல் முறையாக வெளியிட்டுள்ளன.

கார் குண்டுவெடிப்பு

நேற்று மாலை, டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த ஒரு கார் திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 24 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய தகவல்கள்

செங்கோட்டை அருகே பார்க்கிங்கில் சுமார் 3 மணி நேரம் நின்றிருந்த அந்தக் கார், மாலை 6.48 மணிக்கு மெதுவாக இயக்கப்பட்டு சிக்னல் அருகே வந்த பிறகு வெடித்துள்ளது. கார் வெடிப்புக்கு அமோனியம் நைட்ரேட் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

டெல்லி கார் வெடிப்பு ஒரு தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேக நபரின் புகைப்படம்

இந்தக் கார் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் டாக்டர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் வெடித்த காரை ஓட்டி வந்தது மருத்துவர் முகமது உமர் என்ற பயங்கரவாதி என்றும், ஹரியானாவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுக் கைதான மருத்துவர் ஷக்கீர், உமரின் கூட்டாளி என்றும் கூறப்படுகிறது.

எனினும், டாக்டர் உமர் முகமது குண்டுவெடிப்பில் இறந்தாரா அல்லது தலைமறைவாக இருக்கிறாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில், முகமது உமரின் தாயும் சகோதரியும் காஷ்மீரில் வைத்துப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் 8 பேர் கைது

முன்னதாக, உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக, பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் காஷ்மீரில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் பல இடங்களில் நாச வேலைக்குச் சதித்திட்டம் தீட்டி இருந்தது கண்டறியப்பட்டது.