இந்தியா

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: மேலும் ஒரு டாக்டர் கைது!

By Christon
12 Nov 2025, 11:45 AM
டெல்லி கார் வெடிப்பு வழக்கில் காஷ்மீரின் குல்காமைச் சேர்ந்த டாக்டர் தாஜாமுல் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10 ஆம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவத்தை விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை தேசிய புலனாய்வு முகமை அமைத்துள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பு - டி.என்.ஏ. பரிசோதனை

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை ஓட்டிச்சென்றவர் ஜம்மு காஷ்மீர் புல்வாமாவைச் சேர்ந்த உமர் முகமது (வயது 35) என்று தெரியவந்துள்ளது. இவர் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் டாக்டராக வேலை பார்த்தவர் என்றும் சொல்லப்படுகிறது. குண்டுவெடிப்பில் உமர் முகமதுவின் உடல் சிதைந்து போனதால், அவரை அடையாளம் காண முடியவில்லை.

இறந்த உமரைச் சரியாக அடையாளம் காணும் வகையில், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப் போலீசார் முடிவு செய்துள்ளனர். உமரின் தாயார் சமீமா பேகம் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களையும் ஏற்கனவே போலீசார் கைது செய்துள்ளனர். உமரின் தந்தை குலாம் நபி பாத் என்பவரையும் கைது செய்து, அவருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடக்கிறது. மேலும், உமருடன் வேலை பார்த்த 3 டாக்டர்களும் இப்போது விசாரணையில் உள்ளனர்.

மேலும் ஒரு டாக்டர் கைது

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காஷ்மீரின் குல்காமைச் சேர்ந்த டாக்டர் தாஜாமுல் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்ரீநகர் மருத்துவமனையில் வேலை பார்க்கும் இவருக்கும், டாக்டர் உமருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று தீவிரமாக விசாரிக்கிறார்கள். மேலும், வெடித்த காரை விற்பனை செய்த கார் டீலர் ஒருவரும் அரியானாவில் கைது செய்யப்பட்டு, அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.