Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

மணிப்பூர், ஹரியானாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: அதிகாலை அதிர்வால் மக்கள் பீதி!

By VASUKI
27 Sep 2025, 08:58 AM
மணிப்பூரில் நேற்று மாலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில் ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
மணிப்பூர், ஹரியானாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: அதிகாலையில் மீண்டும் ஏற்பட்ட அதிர்வால் பொதுமக்கள் கடும் பீதி!
நேற்று மாலை மணிப்பூரில் ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவு; நிலநடுக்கவியல் மையம் தகவல்!

ஹரியானா மற்றும் மணிப்பூர் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலையிலும் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம்:

முன்னதாக, மணிப்பூரின் சாண்டல் பகுதியில் நேற்று (செப்டம்பர் 26, 2025) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சரியாக மாலை 6.59 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அதன் மையப்புள்ளி 24.26 டிகிரி வடக்கு அட்சரேகையில் 94.12 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையில் இருக்கும் என்றும் தேசிய நிலநடுக்கவியல் மையம் கணித்துள்ளது.

அதிகாலையிலும் அதிர்வு:

நேற்று மாலை மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இன்று அதிகாலை 1.47 மணிக்கும் சில பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், தொடர்ச்சியான இந்த அதிர்வுகள் காரணமாக அப்பகுதி மக்கள் கடும் பீதியிலும் அச்சத்திலும் உள்ளனர்.