ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களூருவில் தற்போது தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், கடந்த 6 மாதங்களில் 7 ஆயிரம் பேரை கடித்துள்ளன.
தெருநாய்கள் தொல்லைக்கு முக்கிய காரணம் அவற்றுக்கு போதிய அளவில் ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். எனவே தெருநாய்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க பெங்களூரு மாநகராட்சி புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, பெங்களூரு மாநகராட்சி தெருநாய்களுக்கு நாள்தோறும் உணவளிக்கும் ஒரு முன்னோடித் திட்டத்தை அறிவித்துள்ளது. ரூ. 2.9 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ் வழங்கப்பட உள்ளது. நாய்களின் ஆக்ரோஷத்தைக் குறைத்து பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நகரின் எட்டு மண்டலங்களில் உள்ள 5,000 தெருநாய்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படும். ஒரு உணவின் விலை ரூ. 22.42 ஆகும். இதில் 150 கிராம் சிக்கன், 100 கிராம் அரிசி, 100 கிராம் காய்கறிகள் மற்றும் 10 கிராம் எண்ணெய் ஆகியவை அடங்கும்.
பெங்களூரில் சுமார் 2.8 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக மாநகராட்சி மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடங்குவதற்கு முன்பே ஒரு சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, சுமார் 500 விலங்கு நலத் தன்னார்வலர்கள் நகரம் முழுவதும் சுமார் 25,000 நாய்களுக்கு உணவளித்து வருகின்றனர்.
இந்த முயற்சியில் தன்னார்வக் குடிமக்கள் பங்கேற்பு மாநகராட்சி ஊக்கப்படுத்தி வருகிறது. மாநகராட்சியுடன் இணைந்து உணவு வழங்கும் முயற்சிகளுக்கு நிதியுதவி செய்யுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தெரு நாய்களுக்கு உணவளிக்கும் இந்த புதிய திட்டத்துக்கு விலங்கு நல ஆர்வலர்கள் வரவேற்றாலும், பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தெரு நாய்களுக்கு உணவு அளித்தால், அதன் அட்டகாசங்கள் மேலும் அதிகரிக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.