இந்தியா

சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு...மத்திய அரசு உத்தரவு

By Jayakumar
07 May 2025, 06:26 PM
மே 2023ல் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் பொறுப்பை பிரவீன் சூட் ஏற்றுக்கொண்டார்.
சிபிஐ இயக்குநர்

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநராக பிரவீன் சூட் உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் மே 25ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சிபிஐயின் புதிய இயக்குநர் நியமனம் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் பங்கேற்றனர்.

ஓராண்டுக்கு பதவி நீட்டிப்பு

இந்த ஆலோசனைக்கூட்டத்தின் பிரவீன் சூட்டின் பதவிக்கால நீட்டிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் மே 25ம் தேதிக்கு பிறகு அடுத்த ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழுவின் செயலாளர் மணீஷா சக்சேனா வெளியிட்டுள்ளார்.

1986ஆம் ஆண்டு கர்நாடகப் பிரிவைச் சேர்ந்த இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரியும், மாநில காவல் துறைத் தலைவராக இருந்த பிரவீன் சூட், மே 2023ல் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.