இந்தியா

வீட்டிற்குள் சிசிடிவி கண்காணிப்பு: புதுமணப் பெண்ணின் விபரீத முடிவு!

By Christon
18 Jun 2026, 12:36 PM
மும்பையில் திருமணமான 48 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பைக்கு அருகே வெறும் 48 நாட்கள் மட்டுமே நீடித்த திருமண வாழ்க்கை, வரதட்சணைக் கொடுமை மற்றும் கணவனின் சிசிடிவி கண்காணிப்பு காரணமாக 26 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அடுத்த தானேவின் அம்பர்நாத் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் நிதின் தில்கர் என்பவருக்கும், விசாகா (26) என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு எல்லாம் சுமுகமாக இருந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு மணமகன் வீட்டார் எதிர்பார்த்த அளவிற்குச் சீர்வரிசைகளும் மரியாதையும் கிடைக்கவில்லை எனக் கூறி விசாகாவிற்குப் புகுந்த வீட்டில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பெற்றோர் வீட்டிலிருந்து கூடுதல் பணமும், நகையும் எடுத்து வருமாறு விசாகாவை அவரது கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினர் தொடர்ந்து வற்புறுத்தி, சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

வீட்டிற்குள் சிசிடிவி கேமரா கண்காணிப்பு

விசாகாவின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில், அவரது கணவர் நிதின் தில்கர் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி (CCTV) கேமராக்களைப் பொருத்தி, விசாகாவின் ஒவ்வொரு நகரத்தையும் தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளார். விசாகா யாரிடமாவது பேசினால், உடனடியாக அவர் மீது கடுமையானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் பேசியதற்காக விசாகா அவரது மாமியார் குடும்பத்தினரால் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளார்.

வழக்குப் பதிவு மற்றும் கைது நடவடிக்கை

தான் அனுபவித்து வந்த கொடுமைகள் குறித்து விசாகா தனது தாயிடம் தொலைபேசியில் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், விசாகாவைத் தங்களது வீட்டிற்குத் திரும்ப அழைத்து வர ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். ஆனால், அதற்குள்ளாகவே மன உளைச்சல் தாங்க முடியாமல் விசாகா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்துச் சிவாஜிநகர் காவல் நிலைய போலீஸார், தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வரதட்சணைக் கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் கணவர் நிதின், அவரது தாய் சாயா மற்றும் சகோதரர் நினாத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் கணவர் நிதின் தில்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).