இந்தியா

குட்கா தகராறில் கொடூரம்.. விஷம் குடித்து மனைவியும் 2 குழந்தைகளும் பலி!

By Christon
26 Aug 2025, 01:54 PM
உத்தரப் பிரதேசத்தில் குட்கா வாங்க கணவன் பணம் தராததால், விஷம் கொடுத்து தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம், சித்திரக்கூடத்தில் குட்கா வாங்குவதற்காக ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த பெண் ஒருவர் விஷம் குடித்து, தனது இரண்டு குழந்தைகளையும் கொன்று, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷம் குடித்த மூன்றாவது குழந்தை, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

குட்காவால் எழுந்த குடும்பத் தகராறு

ஜோதி யாதவ் (26) என்ற பெண், குட்கா போதைக்கு அடிமையானவர். கடந்த 23 ஆம் தேதி காலை, தனது கணவர் பப்பு யாதவிடம் குட்கா வாங்குவதற்காகப் பணம் கேட்டுள்ளார். கூலித் தொழிலாளியான அவரது கணவர் பணம் தர மறுத்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சண்டை முற்றிய நிலையில், அன்று மாலை ஜோதி யாதவ் விஷம் குடித்துவிட்டு, தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பரிதாபமாக உயிரிழந்த மூன்று பேர்

வேலை முடிந்து பப்பு யாதவ் வீட்டிற்குத் திரும்பியபோது, அவரது நான்கு வயது மகன் வலி தாங்க முடியாமல், தனது தாய் கசப்பான ஏதோ ஒன்றை கொடுத்ததாக அழுதுள்ளான். ஒரு வயது குழந்தையான புல்பூல் மூச்சுவிடாமல் இருந்துள்ளது. மேலும், ஜோதி யாதவ் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக குடும்பத்தினர் அவர்களை மாஜ்கவான் சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் ஒரு வயது குழந்தையான புல்பூலை இறந்துவிட்டதாக அறிவித்தனர். மற்றவர்கள் நிலைமை மோசமானதால் சத்னா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும், ஜோதி மற்றும் அவரது நான்கு வயது மகள் சந்திரமா ஆகியோர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஐந்து வயது மகனான தீப்சந்த் உயிர் பிழைத்துள்ளான், ஆனால் அவனது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணை

ஜோதியின் குட்கா பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவரது கணவர் பலமுறை அதை நிறுத்த முயன்றுள்ளார். மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர், அவர்கள் விஷம் குடித்ததை உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து மாஜ்கவான் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).