இந்தியா

சீட்டை விட்டுத் தர மறுத்த பயணியை ஆள் வைத்து அடித்த பாஜக எம்.எல்.ஏ.. ரயில்வே போலீசார் விசாரணை

By VASUKI
23 Jun 2025, 03:14 PM
உத்தரப்பிரதேசத்தில் வந்தே பாரத் ரயிலில் சீட் மாறி அமர மறுத்த சக பயணியை, பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் சிங் ஆட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வந்தே பாரத் அதிவேக ரயிலில் பயணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் சிங், ஒரு பயணியிடம் இடம் மாறி அமர கோரியதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த பயணி “இது என்னுடைய இருக்கை, நான் மாறி அமர முடியாது என்று மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சாதரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. பின்னர், எம்.எல்.ஏ ராஜீவ் சிங்கின் ஆதரவாளர்கள், அந்த பயணியை ரயிலுக்குள் வைத்து சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தாக்குதலுக்கு உள்ளான பயணி, தனக்கு நேரிட்ட தாக்குதலைப் பற்றி ரயில்வே காவல்துறையிடம் புகாரும் அளித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான பயணியின் புகாரை பெற்றுக்கொண்ட ரயில்வே போலீசார், அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், பயணிக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், ரயில்வே போலீசார் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, ரயில்வே போலீசார் கூறியதாவது, “சம்பவம் நடைபெற்ற ரயில் பெட்டியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி, அதன் மீதான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், இருபுறத்தினரிடமிருந்தும் முழுமையான தகவல் பெறப்பட்டு, அதன் பிறகே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ. மீது கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. ரயிலில் பொதுமக்கள் மீது அதிகாரங்களை அத்துமீறி பயன்படுத்தும் அரசியல்வாதிகளின் செயல்களால் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.