இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் விழுந்த ரானுவ வாகனம்.. 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

By VASUKI
05 May 2025, 12:24 PM
ஜம்மு -காஷ்மீரில் ராணுவ வாகனம் ஒன்று 700 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 3 ராணுவ அதிகாரிகள் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் இந்திய ராணுவ வாகனம் 700 அடி பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரிலிருந்து, ஸ்ரீநகருக்கு சென்ற லாரி, பேட்டரி சாஷ்மா என்ற இடத்தின் அருகே விபத்தின் காரணமாக பள்ளத்தாக்கில் சிக்கியது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த ராணுவ அதிகாரிகளான அமித் குமார், சுஜித் குமார் மற்றும் மாண்பகதூர் என்ற மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் பேரிடர் மீட்பு குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் நெடுஞ்சாலைகளில் ராணுவ வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வருவது தொடர் கதையாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வாகன விபத்தில் மூன்று ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காமில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தீவிரவாத தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா தங்களது கடுமையான எச்சரிக்கையை விடுத்த நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது, வாகா எல்லையை மூடியது என பல நடவடிக்கைகளை எடுத்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து எல்லை கட்டுப்பாடு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.இதனிடையே பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசும் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவின் பல்வேறு பல்வேறு முக்கிய இடங்கள் உட்பட சுற்றுலாத்தளங்களில் தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஜம்மு- காஷ்மீர் ரானுவத்தின் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.