இந்தியா

ஆந்திர மதுபான ஊழல்: அமலாக்கத்துறை சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்

By Jayakumar
20 Sep 2025, 10:39 AM
ஆந்திர மதுபான ஊழல் தொடர்பாக தமிழகம் உட்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரொக்கம் ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
ஆந்திரப் பிரதேச மதுபான ஊழல் தொடர்பான வழக்கில், ஐதராபாத் மண்டல அமலாக்க இயக்குநரகம் நாடு முழுவதும் 20 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.

மதுபான ஊழல் வழக்கில் சோதனை

ஐதராபாத், பெங்களூரு, சென்னை, தஞ்சாவூர், சூரத், ராய்ப்பூர், டெல்லி என்.சி.ஆர். மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன.இதில், போலி மற்றும் அதிகப்படுத்தப்பட்ட பில்கள் மூலம் கமிஷன்களை வழங்க உதவியதாகக் கூறப்படும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் இடங்கள் குறிவைக்கப்பட்டன.

சோதனையின்போது, கணக்கில் வராத ரூ.38 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கமிஷன்கள் உருவாக்கம் மற்றும் பணப் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. துபாயில் பதுங்கியுள்ளதாகக் கருதப்படும் சில குற்றவாளிகளின் தொடர்புகளை உறுதிப்படுத்தும் சாட் பதிவுகள் மற்றும் கணக்குகள் கைப்பற்றப்பட்டன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ரூ. 4,000 கோடி அரசுக்கு இழப்பு

ஆந்திரப்பிரதேச சி.ஐ.டி பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-ன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த விசாரணையைத் தொடங்கியது. அக்டோபர் 2019 முதல் மார்ச் 2024 வரையிலான புதிய மதுபானக் கொள்கையில் ரூ. 4,000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக எஃப்.ஐ.ஆர் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கமிஷன் கொடுக்க மறுத்த பிரபலமான மதுபான பிராண்டுகள் ஓரங்கட்டப்பட்டு, புதிய மற்றும் தரமற்ற பிராண்டுகள் ஊக்கப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சப்ளைக்கான ஆர்டர்கள் தானியங்கி முறையில் இருந்து, கையேடு முறைக்கு மாற்றப்பட்டு முறைகேடுகள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி 5 ஆம் தேதி மாநில அரசு இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைத்தது.

குற்றப்பத்திரிகையில் உள்ள முக்கிய அம்சங்கள்

சிறப்பு புலனாய்வுக்குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தானியங்கி முறை கையேடு முறைக்கு மாற்றப்பட்டது. சில நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டது மற்றும் விநியோகஸ்தர்களை கமிஷன் கொடுக்க கட்டாயப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

போலி நிறுவனங்கள் மூலம் funds-ஐ திருப்பிவிடுவது மற்றும் அதிகப்படுத்தப்பட்ட சப்ளை ஆர்டர்களைப் பெறுவது போன்ற முறைகேடுகளும் நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணம் தேர்தல் செலவுகள், தனிப்பட்ட பயன் மற்றும் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையில் தகவல்

அமலாக்கத்துறையின் விசாரணையில், ஆந்திரப்பிரதேச மாநில மதுபான கழகம் (APSBCL) விநியோகஸ்தர்களுக்குச் செலுத்திய தொகையின் ஒரு பகுதி, போலி நிறுவனங்கள் அல்லது தொடர்பில்லாத நபர்களுக்கு சேவை அல்லது பொருட்கள் வழங்கப்பட்டதாக கூறி மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

விநியோகஸ்தர்கள் நகையாளர்களிடம் பணம் கொடுத்து தங்கம் ரொக்கத்தைப் பெற்று, அதை கமிஷனாக கொடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த போலி அதிகப்படுத்தப்பட்ட பில்கள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளுக்கு உதவியுள்ளன என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.