இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்து: ஊகங்களைத் தவிர்க்குமாறு AAIB வேண்டுகோள்!

By VASUKI
17 Jul 2025, 07:35 PM
கடந்த மாதம் ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துகுறித்து, விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள்குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவி வருவதை அடுத்து, AAIB இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
விபத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய AAIB தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சில சர்வதேச ஊடகங்கள் உள்நோக்கத்துடன், ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து AAIB இயக்குநர் ஜெனரல் ஜி.வி.ஜி. யுகந்தர் கூறுகையில், "விசாரணை முடிவுகள் வெளியாகும் முன்பே, தவறான தகவல்களைப் பரப்புவது புலனாய்வு நடைமுறையைப் பாதிக்கும். எனவே, பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், விபத்துகுறித்து அவ்வப்போது தகவல்களை வெளியிட AAIB தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். அதே நேரத்தில், விசாரணை முடிவடையும் வரை காத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

விமானப் போக்குவரத்து நிபுணர் ஒருவர் கூறுகையில், "விபத்துகுறித்த தகவல்கள் இந்தியாவை விட, 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' போன்ற வெளிநாட்டு ஊடகங்களுக்கு எப்படி முன்கூட்டியே கசிந்தன என்பது ஆச்சரியமாக உள்ளது. இது விசாரணையின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்குகிறது" என்றார்.

விமானிகள் சங்கமான ALPA இந்தியா, விபத்தில் உயிரிழந்த விமான ஊழியர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது. "விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்படும் வரை, விமானிகளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம்" என்று ALPA செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

விபத்துகுறித்து பல்வேறு யூகங்கள் பரவி வந்தாலும், AAIB உண்மையான காரணங்களை வெளிக்கொண்டு வரும் வரை பொறுமை காப்பது அவசியம். தவறான தகவல்களைப் பரப்புவதை தவிர்த்து, புலனாய்வு அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், இது போன்ற விபத்துகளைத் தடுக்க முடியும்.