Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

இனி ஆதார் கட்டாயம்.. ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு..!

By VASUKI
11 Jun 2025, 07:37 PM
IRCTC கணக்குடன் கட்டாயம் ஆதாரை இணைக்க ரயில்வே அறிவுறுத்தியுள்ள நிலையில், ஜூலை 1 முதல் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய ரயில்வே துறையின் இணையதளமும், டிக்கெட் முன்பதிவுக்கான அதிகாரப்பூர்வ சேவை மையமாகவும் விளங்கும் IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) பயணிகளுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 1, 2025 முதல் தட்கல் (Tatkal) டிக்கெட் முன்பதிவு செய்யும் பயனர்கள், தங்கள் IRCTC கணக்குடன் 'ஆதார்' எண்ணை கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறையின் மூலம், பயணிகள் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தி, முறைகேடுகள் மற்றும் போலி கணக்குகளை தடுக்கும் நோக்கத்துடன் இதை அமல்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதுவரை, சாதாரண பயண டிக்கெட்டுகளுக்காக ஆதார் கட்டாயமாக இல்லாவிட்டாலும், தட்கல் டிக்கெட் முன்பதிவின் போது பயணிகளின் அடையாளம் மற்றும் நம்பகத்தன்மை மிக முக்கியமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

தட்கல் டிக்கெட் என்பது அவசர பயண தேவைக்காக பயன்படும் சேவையாகும். இதற்காகவே குறிப்பிட்ட சில டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும். ஆனால், இந்த வசதியை தவறாக பயன்படுத்தும் நபர்கள், பேக் எஜென்ட்கள், போலி கணக்குகள் போன்றவை அதிகரித்துவருவதால், பாதுகாப்பான முறையில் இந்த சேவையை வழங்க ஆதார் உறுதிப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதாரை இணைப்பது எப்படி?

பயனர்கள் தங்கள் IRCTC கணக்கில் Login செய்து "My Profile" பிரிவில் 'Link Aadhaar' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, OTP மூலம் ஆதார் எண்னை உறுதிப்படுத்தலாம். இந்த செயல்முறை வெற்றிகரமாக முடிந்த பிறகே ஜூலை 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பயணிகள் மத்தியில் சில கவலைகளும் எழுந்துள்ளன. குறிப்பாக, இணைய வசதி இல்லாதவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்த செயல்முறையில் சிக்கல் அனுபவிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், பாதுகாப்பு, முறையான அடையாள பரிசோதனை, மற்றும் டிக்கெட் சாதாரண பயணிகளுக்கே செல்லும் வகையில் இந்த முடிவை IRCTC எடுத்துள்ளது என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

இந்த புதிய நடவடிக்கையை எதிர்காலத்தில் அனைத்து வகை டிக்கெட் முன்பதிவுகளுக்கும் விரிவாக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.