Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

ஓட்டலில் பில் கட்டாமல் ஓட்டம் பிடித்த கும்பல்.. டிராபிக் ஜாமில் சிக்கிய சம்பவம்!

By Christon
29 Oct 2025, 11:40 AM
ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ரூ. 10,900-க்கு சாப்பிட்டு, பணம் கொடுக்காமல் தப்பிய கும்பல், போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பிடிபட்டனர்.
ராஜஸ்தானில் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்த குஜராத்தைச் சேர்ந்த ஐந்து சுற்றுலாப் பயணிகள், உணவகத்தில் சாப்பிட்ட ரூ. 10,900 பில் தொகையைக் கட்டாமல் ஓட்டம் பிடித்துள்ளனர். ஆனால், இவர்கள் தப்பிச் செல்லும் வழியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி, கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்.

பில் கட்டாமல் ஓட்டம்

குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் குழு, ராஜஸ்தானின் மவுண்ட் அபு அருகே சியாவாவில் உள்ள ஒரு தனியார் உணவகத்துக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் பல்வேறு உணவுகளை ஆர்டர் செய்து உண்ட நிலையில், மொத்த பில் தொகை ரூ. 10,900 ஆனது. இந்தத் தொகையைச் செலுத்தாமல் அங்கிருந்து தப்பிச் செல்ல அவர்கள் திட்டமிட்டனர்.

கழிவறைக்குப் போவதாக நாடகம்

பில் கட்டாமல் ஓட்டம் பிடிக்க, சுற்றுலாப் பயணிகள் ஒரு தந்திரத்தைக் கையாண்டனர். அனைவரும் கழிவறைக்குச் செல்வதாகப் போலியாகச் சொல்லி, ஒவ்வொருவராக வெளியேறி, உடனடியாகத் தங்கள் காரில் ஏறி வேகமாக அங்கிருந்து கிளம்பினர்.

இதனைக் கவனித்த உணவக உரிமையாளரும் பணியாளர்களும் உடனடியாக எச்சரிக்கையடைந்து, அந்தக் காரைத் துரத்தத் தொடங்கினர். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அந்தக் கார் குஜராத் எல்லையை நோக்கிச் செல்வதைக் கண்டறிந்தனர்.

டிராபிக் ஜாம் ஏற்படுத்திய சிக்கல்

உணவக உரிமையாளர், சுற்றுலாப் பயணிகளை விடாமல் பின் தொடர்ந்தார். அவர்கள் குஜராத் எல்லையான அம்பாஜியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட உணவக உரிமையாளர், அவர்களை மடக்கிப் பிடித்து, உடனடியாகக் காவல்துறையின் உதவியை நாடினார். இதையடுத்து, ஐந்து சுற்றுலாப் பயணிகளும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

கைதுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் தங்கள் நண்பரை அழைத்து, ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பச்சொல்லி பில்லைச் செலுத்தியதாக கூறப்படுகிறது.