இந்தியா

மணிப்பூரில் ஆயுதங்களுடன் 3 தீவிரவாதிகள் கைது…தீவிர விசாரணை

By Jayakumar
03 Jul 2025, 05:26 PM
மணிப்பூரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் சிக்கினர் | 3 terrorists roaming around with weapons in Manipur caught in a raid conducted by security forces
மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

தீவிர சோதனை

சோதனையில், தடை செய்யப்பட்ட மூன்று வெவ்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள மெய்த்ராம் பகுதியில் நேற்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த ஓய்னம் ஹெமஞ்ஜித் சிங் கைது செய்யப்பட்டார்.

தீவிரவாதிகள் கைது

இதேபோல் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள செக்மாஜின் மானிங் லீக்கை பகுதியில், தடை செய்யப்பட்ட கங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி (PWG) அமைப்பைச் சேர்ந்த ஓய்னம் டோம்பா சிங் (57) என்பவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இவர் காக்சிங் மற்றும் தௌபால் மாவட்டங்களில் உள்ள பல்வேறு பெட்ரோல் பங்குகளில் பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டவர் என்று கூறப்படுகிறது.

காக்சிங் மாவட்டத்தில் உள்ள எலாங் காங்க்போக்பி அவாங் லீக்கை பகுதியில் நேற்று கங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி (PWG) அமைப்பின் முக்கிய உறுப்பினரான லௌரெம்பம் சுரேஷ் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணை

இதற்கிடையில், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஆண்ட்ரோ குமான் (பருனி குன்று) அடிவாரத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில், துப்பாக்கி மற்றும் தோட்டா, இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் தோட்டாக்கள், ஒரு 12-காலிபர் சிங்கிள் பேரல் துப்பாக்கி, நான்கு கையெறி குண்டுகள், சார்ஜருடன் கூடிய வயர்லெஸ் கருவி மற்றும் இரண்டு டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.