இந்தியா

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 22 பேர்.. வெளியான அதிர்ச்சி தகவல்

By nagalekshmi
07 Apr 2025, 09:10 PM
உத்திரப்பிரதேசத்தில் 19 வயது இளம் பெண்ணை கடத்தி சென்று 22 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் வடக்கு வாரணாசி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த 29-ஆம் தேதி தனது நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அப்பெண் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, இளம் பெண்ணை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஏப்ரல் 4-ஆம் தேதி அப்பெண்ணை மர்ம நபர்கள் சிலர் பாண்டேபூர் சந்திப்பில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை

தன்னிலை அறியாமல் இருந்த அந்த இளம்பெண் அருகில் உள்ள தனது தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து, அப்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தங்களது மகளை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்படி, நண்பர் வீட்டிற்கு சென்ற இளம் பெண்ணை மர்ம கும்பல் ஒன்று கடத்தி சென்று தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தெரிகிறது.

மேலும், இந்த பாலியல் வன்கொடுமையானது ஹோட்டல், விருந்தினர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்துள்ளது என்றும் இதில் 22 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது பெற்றோர் ஏப்ரல் 4-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 6 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புள்ளவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.