Kumudam News 24 X 7 AMP Article
அண்மை

பொள்ளாச்சி வழக்கு...சாகும் வரை ஆயுள் தண்டனை...அரசு தரப்பு கோரிக்கை

By Jayakumar
13 May 2025, 11:42 AM
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க அரசு தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

20 ஆண்டுகள் சிறைதண்டனை உள்ளது

சிபிஐ வழக்கறிஞர் சுந்தரமோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தத் தகவலைத் தெரிவித்தார். 376D கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் 376(2)(N) மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை ஆகிய இரண்டு வன்முறைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்கில் உச்சபட்ச தண்டனையாக சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தியுள்ளோம். குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை உள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு தண்டனை விவரங்கள் நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும், என்று அவர் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவும் அரசு பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

எதிர்தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, குற்றவாளிகள் இளம் வயதினர், அவர்களுக்கு வயதான பெற்றோர்கள் உள்ளனர், குடும்பத்திற்கு ஒரே மகன் போன்ற மனிதாபிமானமற்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். இதில் எந்தவிதமான சிறப்பம்சமும் இல்லை. இதுபோன்ற கோரிக்கைகள் அனைத்து தரப்பிலிருந்தும் பொதுவாக வைக்கப்படுவதுதான். அரசு தரப்பின் நியாயமான கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்கும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம் என்று வழக்கறிஞர் சுந்தரமோகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மின்னணு கருவிகளின் சாட்சியம் முக்கியமானவை

இந்த வழக்கின் சவால்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர், 20 நாட்களில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு, 40 நாட்களில் சிபிஐ இந்த வழக்கை முன்னெடுத்தது. மூன்று மாத காலத்திற்குள் மூன்று வெவ்வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு மாற்றப்பட்டது இந்த வழக்கின் சிக்கலான தன்மையை உணர்த்துகிறது. சிபிஐ விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வரவில்லை.ஆனால், சிபிஐ குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றிய மின்னணு சாதனங்களின் அடிப்படையில் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களைக் கண்டறிந்தது, அந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது, என்றார்.

மேலும், இந்த வழக்கில் அரசு தரப்பில் இருந்து 48 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாகவும், அதில் ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை என்றும், அனைத்து பெண்களும் பயமின்றி சுதந்திரமாக வந்து சாட்சியம் அளித்தது அரசு தரப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய பலம் என்றும் அவர் குறிப்பிட்டார். வழக்கை நிரூபிப்பதில் மின்னணு ஆதாரங்களின் முக்கியத்துவம் குறித்து பேசிய வழக்கறிஞர் சுந்தரமோகன், இந்த வழக்கில் மின்னணு கருவிகளின் சாட்சியங்கள் மிக முக்கியமானவை. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுவதற்கே அவைதான் முக்கியமாக உதவின. வீடியோக்கள் எடுக்கப்பட்ட தேதி, இடங்கள் அனைத்தும் தெளிவாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

சாகும் வரை ஆயுள் தண்டனை

சாட்சிகள் அழிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "அளிக்கப்பட்ட அனைத்து சாட்சிகளும் தரமான முறையில் மீட்டெடுக்கப்பட்டன (Retrieved). அதன் அடிப்படையில்தான் பாதிக்கப்பட்ட பெண்களை நாங்கள் அடையாளம் கண்டோம். தொழில்நுட்ப உதவிகள் இந்த விசாரணையில் மிகச் சிறப்பாக இருந்தன, என்று அவர் பதிலளித்தார்.
ஒன்பது குற்றவாளிகளுக்கும் சாகும் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதுதான் எங்களது உச்சபட்ச கோரிக்கை. நீதிமன்றம் அதனை நிச்சயம் ஏற்கும் என்று நம்புகிறோம். பெண்களுடைய பாதுகாப்பு மற்றும் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நிகழாமல் தடுக்க, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை நாங்கள் மேற்கோள் காட்டியுள்ளோம். தமிழ்நாட்டில் இதுபோன்ற வழக்குகள் இனி ஒருபோதும் நடக்கக்கூடாது என்பதற்காக, எங்கள் தரப்பிலிருந்து மிகக் கடுமையான வாதங்களை முன்வைத்துள்ளோம், என்று உறுதியாக கூறினார்.

கடுமையான முயற்சி மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் இந்த வழக்கு தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாகவும் வழக்கறிஞர் சுந்தரமோகன் தெரிவித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.