Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

"நீங்கள் தான் பைசன்"- மாரி செல்வராஜை மனம் திறந்து பாராட்டிய மணிரத்னம்!

By Christon
29 Oct 2025, 01:21 PM
‘பைசன்’ பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு இயக்குநர் மணிரத்னம் குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், பசுபதி, அமீர், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 17-ஆம் தேதி வெளியான 'பைசன்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகளவில் ரூ.60 கோடி வசூலைக் கடந்த இத்திரைப்படத்தைப் பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

மணிரத்னத்தின் பாராட்டு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் பாராட்டிய நிலையில், தற்போது இயக்குநர் மணிரத்னமும் 'பைசன்' படத்தைப் பார்த்துவிட்டு மாரி செல்வராஜுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் அனுப்பிய குறுஞ்செய்தியை மாரிசெல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "வணக்கம் மாரி. இப்போது தான் படம் பார்த்தேன். ரொம்ப பிடித்திருந்தது. நீங்கள் தான் பைசன். உங்களது வேலையைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். தொடருங்கள். இந்தக் குரல் ரொம்பவே முக்கியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

தொடர்ந்து மாறி செல்வராஜ், " 'பரியேறும் பெருமாள்' படத்திலிருந்து என் படைப்புகள் அத்தனையையும் பார்த்து, கவனித்து, பாராட்டி என்னை ஊக்குவிக்கும் உங்கள் அத்தனை வார்த்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார்" என்று தெரிவித்துள்ளார்.

திரையுலக ஜாம்பவான்களில் ஒருவரான மணிரத்னத்தின் இந்தப் பாராட்டு, 'பைசன்' படக்குழுவினருக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.