சினிமா

என் மனதை மிகவும் ஈர்த்தது... டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பாராட்டிய அமைச்சர் மா. சுப்ரமணியன்!

By VASUKI
05 May 2025, 09:44 AM
சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ் ஃபேமிலி படத்தை, அமைச்சர் மா சுப்பிரமணியன் வெகுவாக பாராட்டியுள்ளார். அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி, கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் , நடிகை சிம்ரன், ஆவேஷம் புகழ் மிதுன், சரிகமப புகழ் கமலேஷ் ஆகியோர் நடிப்பில், மே மாதம் 1-ம் தேதி வெளிவந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து, பொருளாதார சூழல் காரணமாக குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்கு வரும் சசிக்குமார் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்திக்கிறார் என்பதே படத்தின் கதையாக உள்ளது. சீரியஸான இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் காமெடியுடன் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ள இந்த திரைப்படத்தை பல்வேறு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள மா சுப்பிரமணியன், டூரிஸ்ட் ஃபேமிலி படம் என் மனதை மிகவும் ஈர்த்தது. அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் வாழும் வாழ்க்கையை போதிக்கிறது இப்படம். படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும், இரக்கமும், உதவும் குணமும் உள்ளவராக வாழ்ந்தே காட்டியுள்ளார். பல்கலைக்கழகம் என்பதைக் காட்டும் அற்புதமான படமாக இது உருவாகியுள்ளது. படம் முடிந்து வெளிவந்தவுடன், சசிகுமாரிடமும், இயக்குனரிடமும் அலைபேசியின் வாயிலாக தன்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.



திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் வரவேற்ப்பையும் பெற்றுள்ள இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்க்கவேண்டும் என்று படக்குழுவினர் உள்ளிட்ட திரைப்பட விமர்சகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.