Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

VTV படத்தின் காட்சிகள், இசையை பயன்படுத்த 'ஆரோமலே' படக்குழுவுக்கு இடைக்கால தடை!

By Christon
19 Nov 2025, 03:24 PM
'ஆரோமலே' திரைப்படத்தில், சிம்பு நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசையைப் பயன்படுத்தச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்த 'ஆரோமலே' என்ற திரைப்படத்தில், நடிகர் சிம்பு நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' (VTV) படத்தின் காட்சிகள் மற்றும் அதன் பின்னணி இசையைப் பயன்படுத்தச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் விவரம்

மினி ஸ்டூடியோ தயாரிப்பில், சாரங் தியாகு இயக்கத்தில் உருவான 'ஆரோமலே' திரைப்படம் கடந்த 7-ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, அதன் தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கை

ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், "விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் முதல் உரிமையாளர் ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் தான். அந்தப் படத்தின் காட்சி அல்லது இசையைப் பயன்படுத்துவதாக இருந்தால், பதிப்புரிமைச் சட்டப்படி, தங்கள் அனுமதியைப் பெற வேண்டும். எந்தவித அனுமதியும் பெறாமல், 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சி, இசையைப் பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்தை மீறிய செயல் ஆகும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, 'ஆரோமலே' படத்தில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சி, இசையைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும், மேலும் படத்தின் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களைக் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மினி ஸ்டூடியோ படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், 'ஆரோமலே' படத்தில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசையை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்குப் பதிலளிக்கும்படி 'ஆரோமலே' படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.