Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

விஜயகாந்தின் கனவு விரைவில் நிறைவேறும்.. நடிகர் விஷால் பேட்டி!

By Christon
25 Aug 2025, 07:13 PM
“நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற விஜயகாந்த் கனவு, இன்னும் இரண்டு மாதங்களில் நனவாகும்” என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் நடிகர் விஷால் நடிக்கும் 35-வது படமான ‘மகுடம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்துப் பேசியதுடன், பல்வேறு அரசியல் மற்றும் சினிமா சார்ந்த விஷயங்கள் குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

முன்னதாக, மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய விஷால், படக்குழுவினருக்கு மதிய உணவையும் பரிமாறினார்.

விஜயகாந்த் கனவு நிறைவேறும்

செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “நடிகர் விஜயகாந்த் அனைவரையும் சமமாக நடத்துவதில் முன்னுதாரணமாக இருந்துள்ளார். அவருடைய வழியில் நானும் இருக்க ஆசைப்படுகிறேன். இன்றைய அரசியலில் விஜயகாந்த் இருந்திருந்தால், 2026 அரசியல் களம் வேறுமாதிரி இருந்திருக்கும்” என்று கூறினார்.

மேலும், “நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற விஜயகாந்த் கனவு, இன்னும் இரண்டு மாதங்களில் நனவாகும். நடிகர் சங்கக் கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதத்தில் திறப்பு விழாவிற்கு தயாராகிவிடும்” என்றும் தெரிவித்தார்.

விஜய்க்கு வாழ்த்து

நடிகர் விஜய்யின் அரசியல் குறித்துப் பேசிய விஷால், “அரசியலுக்கு புதிதாக வரும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள். சமூக சேவை செய்ய மற்றொரு கட்சி வருகிறது. 2026-ஆம் ஆண்டு தேர்தலில் நிறைவேற்றப்படாத திட்டங்களை வாக்குறுதியாகக் கொடுத்து, அவற்றைச் செயல்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார்.

மேலும், “நல்லது செய்வதுதான் அரசியல் என்றால் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். இங்குள்ள வண்ணமயமான அரசியல் கொடிகளைப் பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது. ஆக்கப்பூர்வமானது ஒன்றும் தெரியவில்லை” என்றும் அவர் கூறினார்.

சினிமா துறை மற்றும் அரசுக்கு கோரிக்கை

சினிமா துறை குறித்துப் பேசிய விஷால், “சினிமாவைப் பொறுத்தவரை ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகளுக்குப் பல முறை கோரிக்கை வைத்து வருகிறோம். சூதாட்டத்திற்கும் சினிமாவுக்கும் ஒரே மாதிரி வரி விதிப்பதை மாற்ற வேண்டும். இந்த நிலையில், சென்னை தரமணியில் உள்ள ஃபிலிம் சிட்டி மோசமாக உள்ளது. இதனால் நாங்கள் ஐதராபாத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. தற்போது தமிழக அரசு ரூ. 5 கோடியில் திறந்து வைத்துள்ள புதிய படப்பிடிப்புத் தளம் வரவேற்கத்தக்கது” என்றார்.

தூய்மைப் பணியாளர்கள் குறித்து

தூய்மைப் பணியாளர்களின் பணி சிறப்பானது என்று குறிப்பிட்ட விஷால், “அவர்களுக்கு கையுறை கூட இல்லாமல் பணியாற்றுவதைக் காணும்போது வருத்தமாக உள்ளது. எனவே, தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதுடன், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் தமிழக அரசு வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.