சினிமா

விஜய்க்கு அடி மேல் அடி.. 'ஜனநாயகன்' படத்திற்கு புதிய சிக்கல்!

By Christon
12 Mar 2026, 02:52 PM
விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் திரைப்பத்தின் ஓடிடி உரிமத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், தணிக்கைத் துறையின் சான்றிதழ் பெறுவதில் நிலவும் இழுபறி காரணமாகப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. பட வெளியீடு அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், தணிக்கை வேலைகள் இன்னும் முடிவடையாதது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நிதியிழப்பில் விநியோகஸ்தர்கள்

படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்காகப் பெரும் தொகை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள், தற்போது தாங்கள் முதலீடு செய்த பணத்தைத் திருப்பிக் கேட்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. திட்டமிட்டபடி படம் வெளியாகாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைச் ஈடுகட்ட அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஓடிடி ஒப்பந்தம் ரத்து?

மிகவும் அதிர்ச்சிகரமான தகவலாக, இப்படத்தின் ஓடிடி உரிமையைச் சுமார் 120 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்த முன்னணி நிறுவனம் தனது ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வெளியீட்டிற்கு முன்பே முழுத் தொகையும் வழங்கப்பட்டுவிடும். ஆனால், தணிக்கைச் சிக்கல் நீடிப்பதாலும், படம் எப்போது வரும் என்ற தெளிவற்ற சூழல் நிலவுவதாலும் அந்த நிறுவனம் பின்வாங்கியதாகத் தெரிகிறது.

தேர்தல் வரை நீடிக்கும் மர்மம்

தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த பிறகே இந்தப் படம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அந்த நடைமுறைகள் முடிவடைய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்பதால், அதுவரை காத்திருக்க விரும்பாமல் ஓடிடி நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனப் பேசப்படுகிறது.