Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்திற்கு சிக்கல்: தடை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!

By Christon
18 Dec 2025, 03:47 PM
‘வா வாத்தியார்’ திரைப்படம் மீதான தடையை நீக்கக் கோரி, தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அவரது 26வது படமான ‘வா வாத்தியார்’ திரைப்படம் மீதான தடையை நீக்கக் கோரி, தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் படத்தின் வெளியீட்டில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

கடன் விவகாரமும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவும்

மறைந்த தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடன் வாங்கியிருந்தார். தற்போது அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அவரது சொத்துகளைச் சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து வருகிறார்.

இதற்கிடையில், ஞானவேல்ராஜா கடன்தொகையைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால், ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று சொத்தாட்சியர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். கடன்தொகையில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் மட்டுமே படத்தின் மீதான தடையை நீக்க முடியும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர். ஆனால், ஞானவேல்ராஜா கடன்தொகையைச் செலுத்தாததால், நீதிமன்றம் விதித்த தடையை நீட்டித்துத் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றமும் மனு தள்ளுபடியும்

கடனைத் திரும்பச் செலுத்தும் வரை படத்தின் தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில், ‘வா வாத்தியார்’ திரைப்படம் மீதான தடையை நீக்கக் கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று நீதிபதி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.