Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

இயக்குநர் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பில் நடந்த சோகம்.. நடிகர் உயிரிழப்பு

By Jayakumar
14 Jun 2025, 11:06 AM
இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், துணை நடிகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பா.ரஞ்சித் தற்போது 'வேட்டுவம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'தங்கலான்' படத்தின் ரிலீஸுக்கு பின் அவர் நடிகர் ஆர்யாவை வைத்து 'சார்பட்டா பரம்பரை - 2' படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 'வேட்டுவம்' படத்தை இயக்குவதாக அறிவித்தார்.

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அசோக் செல்வன், கலையரசன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் முழு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக திருவள்ளூர் அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பு நேற்று (ஜூன் 13) மதியம் நடந்து வந்த நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த துணை நடிகர் மணிகண்டன்(60) என்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து படக்குழுவினர் அவரை தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தார். இது குறித்து தகவலறிந்த வெள்ளவேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், படப்பிடிப்பு தளத்தில் துணை நடிகர் உயிரிழந்த சம்பவம் படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.