Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

ராஜா ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்கள்.. திரையிசை பயணத்தை கொண்டாட அரசு முடிவு!

By nagalekshmi
14 Mar 2025, 06:50 AM
இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்  திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா ‘இசைஞானி’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இசைத்துறையில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் இவர் சமீபத்தில் 35 நாட்களில் சிம்பொனி இசையை உருவாக்கி முடித்ததாக கூறி அனைவரும் ஆச்சர்யப்படுத்தினார். 

‘வேலியண்ட்’ (Valiant) என பெயரிடப்பட்ட இந்த சிம்பொனி இசையை மார்ச் 8-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இளையராஜா அரங்கேற்றினார். இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்த இளையராஜாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், சிம்பொனி இசையை அரங்கேற்றி சாதனை படைத்த இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. அதாவது, இசையமைப்பாளர் இளையராஜா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், “இலண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!” என்று பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இளையராஜா நேரில் சந்தித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Read more:

சிம்பொனியை யாரும் பதிவிறக்கம் செய்யக் கூடாது.. டுவிஸ்ட் வைத்த இளையராஜா